திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வருமான வரித்துறை அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை வென்றது.
திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மறைந்த ஹாக்கி வீரர்களான பாலசுப்பிரமணியன், ஜெயசிங், பழனியாண்டவர், மெய்யப்பன் ஆகியோர் நினைவாக மாநில அளவிலான 20 ஆவது ஆண்டு ஹாக்கி போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இதில் சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 28 அணிகள் பங்கேற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், நெல்லை ஹாக்கி விசாட்ஸ் அணியும் விளையாடியதில் 1 - 0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதியானது. இதேபோல வருமானவரித்துறை அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதியதில், 2 - 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து டை பிரேக்கர் முறையில் வருமானவரித்துறை அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதியானது.
வருமானவரித்துறை அணியும், தமிழ்நாடு காவல்துறை அணியும் இறுதி போட்டியில் விளையாடியதில் 2 -1 என்ற கணக்கில் வருமானவரித்துறை அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை வென்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹாக்கி கிளப் அணி செயலாளர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வர் செங்கதிர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி இரண்டாம் இடமும், இந்தியன் வங்கி அணி மூன்றாம் இடமும் பெற்றன. மாவட்ட ஹாக்கி சங்கப் பொருளாளர் சுயாம் ஆனந்தராஜ், திருநகர் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் நாகராஜன், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.