பொதுமக்களின் நலன் கருதி, நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஒத்திவைப்பதாக நீதிமன்றத்தில் அளித்த உறுதியை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த லோகநாதன் தாக்கல் செய்த மனு விவரம்: ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால், மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர். வேலைநிறுத்தத்தால், "கஜா' புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் விதிப்படி, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனுமதி இல்லை. எனவே ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வழங்கப்படும் அறிக்கையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, ஜாக்டோ- ஜியோ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்தோம். ஆனால், அரசு கோரிக்கையை நிறைவேற்றத் தவறிவிட்டது.
எனவே, நாங்கள் அளித்த உறுதியை திரும்பப் பெறுகிறோம் எனத் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை, ஜனவரி 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.