மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிர்காக்கும் துறை மற்றும் தொழில்நுட்பநர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்களை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வியாழக்கிழமை வழங்கினார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை கல்லூரியில் பிஎஸ்சி உயிர்காப்புத்துறை, ஆய்வக நுட்பநர், மருத்துவப் பதிவேடு துறை குறித்த பட்டப் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. இங்கு பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் சம்பத்குமார் வாழ்த்திப்பேசும்போது, மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளுக்கு இந்திய அளவில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது. தரமான மருத்துவத்தை கொடுத்து நோயாளிகளை காப்பாற்றுவதற்கு இது போன்ற படிப்புகள் உதவியாக உள்ளன. நல்ல சமுதாயத்தை படைக்க மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். விழாவில், முதுநிலை மேலாளர் பாண்டியராஜன், பதிவேடு துறை முதுநிலை மேலாளர் ராஜ்குமார், மருத்துவர்கள் மதுசூதனன், நரேந்திரநாத் ஜனா, பொது மேலாளர் அழகுமுனி மற்றும் கல்லூரி முதல்வர் ஷர்மிள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.