நீதித் துறை வரலாற்றில் மக்கள் நலன் சார்ந்து ஏராளமான புரட்சிகளைச் செய்தவர் நீதிபதி பி.என். பகவதி என்று. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
நீதிபதி பி.என். பகவதி அறக்கட்டளை சார்பில், அவரது பெயரில் மனிதநேய விருதுகள் வழங்கும் விழாவில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சனிக்கிழமை பேசியது:
கடந்த 2017 இறுதி முதல் 2018 வரை ஏறக்குறைய உச்ச நீதிமன்றம் ஆளுமை செய்த ஆண்டு என்றே கூறலாம். தனியுரிமை (ஆதார் பிரைவசி), முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிர்ப்பு, சபரிமலை தரிசனத்துக்கு பெண்களுக்கு சம உரிமை என்பது போன்ற மனித உரிமைகள் சார்ந்த ஏராளமான முக்கிய தீர்ப்புக்கள் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தவர் நீதிபதி பி.என்.பகவதி.
நீதித்துறை வரலாற்றில் மக்கள் நலன் சார்ந்து ஏராளமான புரட்சிகளை செய்திருக்கிறார். அடித்தட்டு மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கு சமூகம் மற்றும் சட்டம் சார்ந்த குழுக்களை அமைத்து, அவர்கள் விசாரித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தீர்வு, நிவாரணம் போன்றவை தீர்மானிக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார். பெண் கைதிகளை பெண் காவலர்கள்தான் விசாரிக்க வேண்டும், இளம் குற்றவாளிகளைக் கையாளும் விதம், குழந்தைகள் உரிமை தொடர்பான உத்தரவுகளில் அவரது பங்களிப்பு அதிகம் . அவர் பணியிலிருந்த காலத்தை விட, ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைகள் சார்ந்த ஏராளமான பணிகளைச் செய்துள்ளார்.
நீதிபதி பி.என். பகவதி போன்றவர்களின் பணிகளை மீண்டும் மீண்டும் நினைவுகூருவது நம்மை வாழ்வில் தெளிவுபடுத்திக் கொள்ள சிறந்த உதவியாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், காந்தி நினைவு நிதி தலைவர் க.மு. நடராஜன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர். அழகுமணி, ஆர். காந்தி, ஆர். கருணாநிதி, எஸ்.எம்.ஏ.ஜின்னா, எஸ். பிரான்சிஸ், வி.எஸ். ஸ்ரீதர், ஏ. மனோகரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நீதிபதி பி.என். பகவதி அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் வி. ஜீவானந்தம், சோகோ அறக்கட்டளை நிறுவனர் மகபூப் பாஷா, வழக்குரைஞர் செல்வகோமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.