மதுரையில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் போலி மது பாட்டில்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர்.
மதுரை கல்லம்பல் பகுதியில் போலி மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் கல்லம்பல் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 3 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவற்றை கடத்தி வந்த அனுப்பானடியைச் சேர்ந்த பாலமுருகன்(42), விராதனூரைச் சேர்ந்த மோகன்(51), ஐராவதநல்லூரைச் சேர்ந்த செல்வக்குமார்(40) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து போலி மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.