சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு வழங்க, மானிய விலையில் மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமணம் போன்ற குடும்ப விழாக்கள், சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினருக்கு மரக்கன்று வழங்கும் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் குறைந்த விலையில் தரமான நடவுச் செடிகள், பழச் செடிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையின் கீழ் கடந்த ஆண்டில் (2017-18) மட்டும் ரூ.9.26 கோடி பழக்கன்றுகள், அழகு செடிகள் போன்றவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
அழகுச் செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கன் போன்ற மரச் செடிகள் ரூ.10 முதல் ரூ. 20 வரையிலும், பழச்செடிகள் ரூ.10 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.10 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, செடிகள் தேவைப்படுவோர் வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுதவிர விவசாயிகளுக்கான, உழவன் செல்லிடப்பேசி செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை மின்னஞ்சல் (dd.dohpc.mdu@tn.gov.in),, முகநூல் (தோட்டக்கலை), சுட்டுரை (THOTTAKALAI), கட்செவி அஞ்சல் (9585874567) ஆகியவற்றில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.