மதுரை திருநகர் பாண்டியன் நகரில் போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெல்லையப்புரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். திருநகர் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, வழக்குரைஞர் இளமகிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், போலீஸார் - பொதுமக்கள் நல்லுறவை வளர்க்கும் விதத்தில் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உரியடித்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் பூர்ண சந்திரன், மதி, சிவராஜா, ஜீவா, குமரேசன், லிங்கராஜ் மற்றும் போலீஸார் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்படுகிறது.