திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில், சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சுவாமி தெய்வானையுடன் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளியதும், அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சட்டத்தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் ரத வீதிகள் வழியாகச் சென்று பின்னர் நிலையை அடைந்தது.
இன்று தெப்பத்திருவிழா: விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்தில் தெய்வானை சமேதராக சுப்பிரமணியசுவாமி வலம் வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி(பொறுப்பு) மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.