மதுரை விமான நிலையத்திலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை செல்லத் தயாராக இருந்தது. விமானத்தில் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய குடியேற்றத்துறை ஆய்வாளர் விக்டர் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம், கடைய நல்லூரை சேர்ந்த சிவகுமரன் (42), போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது.
அதையடுத்து விமானநிலைய அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிந்து சிவகுமரனை கைது செய்தனர்.