மதுரை விளாச்சேரி பகுதியில் முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்த இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கெளதம்ராஜா (30). ஏ.சி மெக்கானிக். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை விளாச்சேரி மொட்டை மலை பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சேதுபிரசாத் (25), கரண்ராஜா (19) ஆகிய இருவரும் சேர்ந்து கௌதம்ராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் கெளதம்ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து சேதுபிரசாத், கரண்ராஜா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கெளதம் ராஜாவுக்கும் சேது பிரசாத்தின் அண்ணன் ஆதீஸ்வரனுக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதில்
ஆதீஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாராம். இதற்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸார் தரப்பில்
தெரிவித்தனர்.