திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை அகற்றும் வரை தொடர்ந்து முற்றுகையிடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
விளாச்சேரியில் மொட்டமலை பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடை குடியிருப்புகள் மத்தியில் இருப்பதாகவும், அங்கு மது அருந்துபவர்களால் அப்பகுதி பெண்களுக்கு தொல்லை ஏற்படுதாகவும் புகார் எழுந்தது. மேலும் மது அருந்த வரும் சமுக விரோதிகள் தகராறில் ஈடுபட்டு கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து, மதுபானக்கடையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வியாழக்கிழமை அக்கடையை முற்றுகையிட்டனர். இதனால் கடை திறக்கப்படவில்லை.
அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடையை அகற்றும் வரையில் முற்றுகையிட முடிவு செய்து, வெள்ளிக்கிழமையும் அந்த மதுபானக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து கடை திறக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியது: இப்பகுதியில் மதுபானக் கடை இருப்பதால் சமுக விரோத செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. பள்ளி, குடியிருப்புகள் அதிகம் உள்ள இங்கு மதுபானக் கடை இருப்பதால் பெண்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர். எனவே மதுபானக் கடையை நிரந்தரமாக இந்த இடத்தை விட்டு அகற்றும் வரை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபடுவோம் என்றனர்.