போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நாடு முழுவதும் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் நடத்தப்படும் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் நாடு முழுவதும் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக அன்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்தறை போலீஸார் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 2014-15ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில், 253 மாணவர்களின் விண்ணப்பங்களில் முழுமையான விவரங்கள் இல்லை. ஆனால், அந்த மாணவர்களுக்கு தொலைநிலைக் கல்வி திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், பல்வேறு ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளன.
மேலும், 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போலி மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண் சான்றிதழ்களுக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக தொலைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் சிண்டிகேட், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொலைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிய விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.