மதுரையில், தலையில் கல்லை போட்டு ரௌடியை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி நகர் அருகே தலையில் பலத்த காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்த நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் திருநகரைச் சேர்ந்த ரௌடி சதீஷ்குமார்(29) என்பது தெரியவந்தது.
இவரது தலையில் கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக இக் கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.