திருமங்கலத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் சுமார் 70 -க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி திருமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் திரண்டு கோஷமிட்டனர். மேலும் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் நகர் போலீஸார் மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்கு திரும்பச் செய்தனர். இதனால் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்ல முடியாமலும், மதுரை - திருமங்கலம் சாலையிலும் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.