மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி தாக்கல் செய்த மனு:
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
சிபிசிஐடி போலீஸார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
அதுவரை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினர். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.