அரசுப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள "ராட்சசி" திரைப்படத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
நடிகை ஜோதிகாவின் நடிப்பில் ராட்சசி திரைப்படம் அண்மையில் வெளியாகி தமிழகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அரசுப்பள்ளி குப்பை, அங்கு ஆசிரியர்கள் எப்போது வருவார்கள், எப்போது போவார்கள் என்று தெரியாது. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர் என்பன உள்ளிட்ட தவறான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து பெற்றோரிடம் தவறான கருத்துகள் ஏற்பட இத்திரைப்படம் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிப்பதாக உள்ளது.திரைப்படத்தில் ஒரு ஆசிரியரை மட்டும் உயர்வாக காட்டிவிட்டு ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சமுதாய சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று காட்டப்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது.
தமிழகம் முழுவதும் 56,000 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப்பள்ளிகளில், அடுத்த வேளை உணவுக்காகப் போராடும் பெற்றோரின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் தான் பெரும்பான்மை மாணவர்களாக உள்ளனர்.
இந்த குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து சமூகத்தில் அவர்களையும் கற்றவர்களாக மாற்றும் அறப்பணியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அரசுப்பள்ளிகளை முற்றிலும் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள ராட்சசி திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.