மதுரையில் போக்குவரத்தை சீர்செய்யும் போது ஏற்பட்ட தகராறில் நிலத்தரகர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை திருநகர் ஏவிஆர். நகரைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவர் நிலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 9 -ஆம் தேதி முனிச்சாலை அருகே அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இது குறித்து அவரது மனைவி கீதா அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், 9-ஆம் தேதி கணேசன் முனிச்சாலை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்துள்ளார். அப்போது மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவருக்கும் கணேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் கல்லால் கணேசனின் தலையில் தாக்கியது தெரியவந்தது.
இந்நிலையில், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து தெப்பகுளம் போலீஸார் கொலை வழக்குப்பதிந்து செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.