வாடிப்பட்டி பகுதி விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளதால் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி பகுதியில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவை கொப்பரை குவிண்டால் ரூ. 9 ஆயிரத்து 521-க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, வாடிப்பட்டி பகுதி தென்னை விவசாயிகள் தங்களது நிலத்துக்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து மட்டுமே அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்துக்கு குறைவாகவும், பூஞ்சானம் மற்றும் சுருக்கம் நிறைந்த கொப்பரைகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும் அயல்பொருள்கள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஆய்வகத் தரப் பரிசோதனை செய்து கொப்பரை கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஒரு விவசாயியிடம் இருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக 191 கிலோ மட்டும் கொள்முதல் செய்யப்படும். இம் மாதம் தொடங்கி (ஜூலை) 6 மாதங்களுக்கு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் கொப்பரை கொள்முதலுக்கு உடனடியாகப் பதிவு செய்து, பயன்பெறலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 9976630746 என்ற எண்ணிலும், வேளாண் உதவி இயக்குநர், விற்பனைத் துறை வேளாண் உதவி அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.