குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க நீர் மேலாண்மைத் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்குவதுதான் தற்போது முக்கியம். அது எப்படி வந்தது என ஆராயாமல், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என்பதில், திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக உள்ளன.
தற்போது நடக்கும் ஆணவக் கொலைகளை தடுக்க முதல்வர் முயற்சிக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே நடந்தவைகள் குறித்து கூறுவது உகந்தது அல்ல. தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களை கொண்டு வரவேண்டும். குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு காவிரி, வைகை, குண்டாறு வடிநிலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று, மாநில அரசு செயல்படுத்த வேண்டும்.
பெரிய அளவிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களைக் கொண்டுவந்தால்தான் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். திமுக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் இத்திட்டங்களை கொண்டு வர மக்களவையில் வலியுறுத்துவோம் என்றார்.