வங்கி அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையும், கட்டணத்துக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியையும் ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டதாக, அச்சங்கத் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
அம்மனுவில், பணமில்லா பரிவர்த்தனை நடக்க வேண்டுமென்றால், அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணங்கள் வசூலிப்பதை ரத்து செய்யவேண்டும்.
தற்போது, அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 0.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மேலும், கட்டணத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. எனவே, தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வங்கி கட்டணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.