திருப்பரங்குன்றம் ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆனந்தம் அரிமா சங்கம், வாய்ஸ் டிரஸ்ட் மற்றும் சுஜி ஹெல்த் கேர் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு ஆனந்தம் அரிமா சங்க தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக முன்னாள் ஆராய்ச்சியாளர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: மழை காலத்தில் வீடு மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டெங்குவிற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. வரும் காலங்களில் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களாகி சமூகத்திற்கு தேவையான விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
டெங்கு ஒழிப்பில் மாணவர்களும் பங்கேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அரிமா நடராஜன், முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன், முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.