கொத்தடிமை முறை அகற்றுவது தொடர்பாக கண்காணிப்புக் குழு அலுவலர்களுக்கான கருத்தரங்கம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை சார்பில் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, அத் துறையின் ஆணையர் ஆர்.நந்தகோபால் தொடக்கி வைத்தார். இதில் அவர் பேசியது: தேசிய அளவில் கொத்தடிமைகள் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம். இங்கு சென்னை, தஞ்சாவூர், சேலம், கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கொத்தடிமை முறை பரவலாக உள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. கல்குவாரிகளில் தான் கொத்தடிமைகளாக இருந்து அதிகம்பேர் மீட்கப்படுகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை மட்டுமின்றி வருவாய், காவல் உள்ளிட்ட பிற துறையினருடன் இணைந்த கூட்டு நடவடிக்கை மூலமாகத் தான் கொத்தடிமை முறையை ஒழிக்க முடியும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர்: மதுரை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழில் முறையை ஒழிக்கவும், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு செயல்படுகிறது. இதேபோல, உசிலம்பட்டி, மதுரை, மேலூர் ஆகிய வருவாய் கோட்ட அளவிலும் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் குழு செயல்பட்டு வருகிறது.
கொத்தடிமைத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் நிரந்தரமாக விடுபடும் வகையில் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன என்றார்.
தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் எம்.ராதாகிருஷ்ணபாண்டியன், இணை ஆணையர் பி.வேல்முருகன், துணை ஆணையர் பி.சுப்பிரமணியன், உதவி ஆணையர் ப.காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.