மதுரை, ஜூன் 12: மதுரையில் செவ்வாய்க்கிழமை மட்டும் 4 பெண்களிடம் 24 பவுன் நகைகளை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை சி.எம்.ஆர். சாலை பகுதியைச் சேர்ந்த உதயக்குமார் மனைவி லாவண்யா (30). இவர், வீட்டின் அருகே தெப்பகுளம் கண்மாய் பகுதியில் நடந்துச் சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், லாவண்யா கழுத்தில் அணிந்து இருந்த 11 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில் தெப்பகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நேரு நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி முருகேஸ்வரி (44). இவர் கடைக்கு செல்வதற்காக அருகில் உள்ள நேரு நகர் புறவழிச் சாலையில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், முருகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த கதிரேசன் மனைவி கனகவள்ளி. இவர் ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். கோயிலின் அருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் கனகவள்ளியின் 6 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து கனகவள்ளி அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நாகுபிள்ளை தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜவகர்பாபு மனைவி ஊர்மிளா (42). இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ஊர்மிளா கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து ஊர்மிளா அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே நாளில் 4 சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடயை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.