திருப்பரங்குன்றம், திருமங்கலம் தாலுகாக்களில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. முதல்நாளில் 377 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பரங்குன்றம் தாலுகாஅலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கா.கண்ணப்பன், வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. திருப்பரங்குன்றம், நிலையூர் 2 பிட், வாலனேந்தல், புதுக்குளம் 3 பிட், சூரக்குளம், தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் நாள் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் பட்டா மாறுதலுக்கு 112 மனுக்கள், உதவித்தொகை கேட்டு 31 மனுக்கள், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பெயர் மாற்றம் உள்பட மொத்தம் 162 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 77 மனுக்களில் 20 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் விசாரணையில் உள்ளன. ஜமாபந்தி மேலும் 2 நாள்கள் நடைபெறும்.
திருமங்கலம்: இதேபோல, திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் முத்திரைத்தாள் துணை ஆட்சியர் ரஞ்சித் , வட்டாட்சியர் தனலெட்சுமி ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
கொக்குளம் வட்டத்திற்கு உள்பட்ட புளியங்குளம், கிண்ணி மங்கலம், கரடிக்கல் , உச்சப்பட்டி, உரப்பனூர் உள்ளிட்ட 13 கிராமங்களுக்கு முதல் நாள் ஜமாபந்தி நடைபெற்றது. பட்டா மாறுதல், முதியோர், விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 215 மனுக்கள் பெறப்பட்டன. ஜமாபந்தி மேலும் நாள்கள் நடைபெறும்.