விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்களில் விடைத்தாள் திருத்துவதில் தவறு நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.


கல்வி நிறுவனங்களில் விடைத்தாள் திருத்துவதில் தவறு நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் 
ஒட்டன்சத்திரத்தில் உள்ள  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றதாகவும், பணம்  வாங்கிக்கொண்டு பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. இந்த குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி 10 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: 
கல்வி நிறுவனங்களில் விடைத்தாள் திருத்துவதில் தவறு நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, விடைத்தாள் திருத்தம் நியாயமாக நடைபெறுவதை  உறுதி செய்யவேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் தடுக்க கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கல்வித்துறை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதில் தவறு நடைபெற்றால் முழு நடைமுறையையும் மறு ஆய்வுக்கு உள்படுத்தி தவறுகளை திருத்தவும், தவறுக்கான வாய்ப்புகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்த சூழ்நிலையில் குற்றச்சாட்டுக் குறிப்பாணையில் நீதிமன்றம் தலையிட்டால் விசாரணை பாதிக்கப்படும். 
இதனால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக் குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் விசாரணையை சந்தித்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மனுதாரர்கள் 2 வாரத்தில் குற்றச்சாட்டுக் குறிப்பாணைக்கு பதிலளிக்க வேண்டும். மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com