மதுரை மாவட்டம் வளையபட்டியில் புதியதாக நியமிக்கப்பட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர்கள் 2 பேருக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கல்லுப்பட்டியை அடுத்த வளையப்பட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியின் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நாகராஜன் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வளையபட்டியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அதே பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி, ஜோதிலட்சுமி ஆகிய இருவருக்கும் பணியாற்ற பணி நியமன ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். ஆனால் வளையபட்டியில் உள்ள ஒரு பிரிவினர் இருவரையும் பணி செய்யக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் குழந்தைகள் நலத் திட்ட அலுவலர் அன்னலட்சுமியை கிழவனேரி கிராமத்திற்கும், ஜோதிலட்சுமியை மதிப்பனூர் கிராமத்திற்கும் தற்காலிகமாக பணியாற்ற வாய்மொழியாக உத்தரவிட்டு பணியாற்ற அனுமதித்துள்ளனர்.