மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பூதமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட செவல்பட்டி கிராமத்தில் உள்ள உலகமாதா அம்மன் கோயில் ஆனி மாத உற்சவத்தையொட்டி 508 பால்குட வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் திருவிழா நாள்களில் மட்டுமே பெண்கள் இக்கோயிலுக்கு வழிபட வருவார்களாம். ஆனி மாத உற்சவத்தையொட்டி கடந்த 15 நாள்களாக இக்கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விரதம் மேற்கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை 508 குடங்களில் பால் நிரப்பப்பட்டு கிராம மந்தையிலிருந்து பெண்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.