திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளதாக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் பா.சரவணன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட செயலர் மு.மணிமாறன் தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் பா.சரவணன் வரவேற்றார். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பா.சரவணன் செய்தியாளர்களிடம் கூறியது: திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் குடிநீர் பிரச்னை அதிகமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த ஆட்சியில் 8 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பயன்படுத்தப்படாமல் மோசமான நிலையில் இருந்தது. தற்போது அலுவலகத்தை சீர் செய்து வைத்துள்ளோம். சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.
மக்கள் அனைவரும் நேரடியாக வந்து புகார்களை தெரிவிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முறையான கழிப்பறை வசதிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்துதர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலர் பாலாஜி, பகுதி செயலர் உசிலை சிவா, இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.