மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் கூட்ட அரங்கில் மூத்த வழக்குரைஞர்கள் டி.ஸ்ரீநிவாச ராகவன், எம்.டேனியல் மனோகரன் ஆகியோரின் புகைப்படங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கடந்த 1872 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், தமிழகத்தில் அதிகமாக உறுப்பினர்களை கொண்ட பழமையான சங்கமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தின் உறுப்பினர்களான மூத்த வழக்குரைஞரும் உரிமைகள் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவருமான டி.ஸ்ரீநிவாச ராகவன் அவர்களின் புகைப்படமும், மூத்த அரசு வழக்குரைஞர் எம்.டேனியல் மனோகரன் அவர்களின் புகைப்படமும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் சங்கத்தின் கூட்டரங்கில் திறக்கப்பட்டன.
இப்படங்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு திறந்துவைத்தார். முதலாவது கூடுதல் நீதிபதி தாண்டவன், தலைமைக் குற்றவியல் நீதிபதி சேமனந்தகுமார், சங்கச் செயலர் மோகன்குமார், தலைவர் நெடுஞ்செழியன், நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க நூலகத்திற்கு, டி.ஸ்ரீ நிவாச ராகவனின் மகன் மாதவன், எம்.டேனியல் மனோகரனின் மகன் தினகரன் ஆகியோர் சேர்ந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினர். இந்நிகழ்வில் நூலகர் சுரேந்திரன் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை நூலகத்திற்கு வழக்கினார்.