மத்திய நிதி மற்றும் ரயில்வே அமைச்சர்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் நேரில் சந்தித்து தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன், செயலர் ஜே.செல்வம், முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் ஆகியோர் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனர்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
மதுரை -கன்னியாகுமரி இரட்டை அகல ரயில்பாதைத் திட்டப் பணிகளைத் தொடங்குவது, மதுரை - தேனி-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவது, மதுரை -அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம், மதுரை -பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் அறிமுகம் செய்வது, மதுரையில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள், கொல்லம் - மதுரை ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே அமைச்சரிடம் அளித்தனர்.