மணல் கடத்தலைத் தடுக்க சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி மனு: 4 துறைகளின் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

மணல் கடத்தலைத் தடுக்க முக்கியச் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கோரும்  மனுவுக்கு உள்துறை

மணல் கடத்தலைத் தடுக்க முக்கியச் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கோரும்  மனுவுக்கு உள்துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப  உயர்நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அக்னி ஆறு, வெள்ளாறு, குண்டாறு பாம்பாறு உள்ளிட்ட ஆற்றுப் படுகைகளில் ஏராளமான லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் போதிய நடவடிக்கை இல்லை. எனவே, ஆற்றை ஒட்டியுள்ள முக்கியச் சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினால் மணல் கடத்தல் கும்பல் மற்றும் மணல் கடத்தும் வாகனங்களை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்எஸ் சுந்தர் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்த முயன்றபோது  எவ்வளவு மணல் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன? மேலும், மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற உத்தரவு எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக, உள்துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com