உசிலம்பட்டி அருகேயுள்ள கல்யாணிப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கக்கோரி உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
உசிலம்பட்டி அருகேயுள்ள கல்லூத்து ஊராட்சிக்கு உள்பட்ட கல்யாணிப்பட்டி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு தெற்கு தெருவில் வசித்து வரும் 100 குடும்பங்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக கூட்டுகுடிநீர் மூலம் வழங்கக்கூடிய குடிநீர் சீராக வழங்க வில்லையாம். இந்த தெரு பொதுமக்கள் வடக்கு தெருவில் சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் குடிநீர் பிடிக்க விடுவதில்லை. இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் கிராம பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கக்கோரி உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த ஒன்றிய ஆணையாளர் தாமோதரன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஓரிரு நாள்களில் குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு வாரத்திற்க்குள் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் பாற்றாக்குறை தீர்க்கப்படும் என உறுதியளித்தை அடுத்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.