அரசுத் துறையில் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான்சன் தாக்கல் செய்த மனு: கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் கிராம நிர்வாக அலுவலராக ஆகப் பணிபுரிந்து வந்தேன். 2004 ஜூலை மாதம் என்னை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து 2005-ஆம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தேன்.
இந்நிலையில் 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடம் மேல்முறையீடு செய்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. எனவே, எனது மனுவினை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடம் நிலுவையில் உள்ள மனுக்களை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் விரைந்து முடிக்க தமிழக தலைமைச் செயலர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு மனுக்களை அதிகாரிகள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.
அதனை உறுதி செய்து தமிழக தலைமைச் செயலர் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.