சித்திரைத் திருவிழா தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் பகுதிகளில் உள்ள 152 வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் பணிக்கு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.
இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் மற்றும் கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: மதுரை மாவட்டத்துக்கு உள்பட்ட 10 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் நடைபெறும் மாசி வீதிகள், கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் கோ.புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் 157 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸார் நியமிக்கப்படுவர்.
அதேபோல, வாக்குப்பதிவுக்கான நேரத்தை அதிகப்படுத்தவும், கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் அதிகமாகவோ அல்லது அதற்கு குறையாமலும் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், இளம் வாக்காளர்களை விடுபடாமல் பட்டியலில் சேர்ப்பது ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு ஆகியன வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 675 சுவரொட்டிகள், 792 கொடி மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 530 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றார்.