சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்றக் கோரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று மக்களவைத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பார்த்தசாரதி என்பவர் மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாள்களாக நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 15-ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற மதுரை மக்களவைத் தொகுதியின் தேர்தல் தேதி மாற்றம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு குறித்து சென்னையில் அணுகலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தெரிவித்துள்ளார்.