பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம், மதுரை டி.எம். கோர்ட் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகரச் செயலர் சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும். பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்க விடக் கூடாது. சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட 15 அமைப்புகள் பங்கேற்றன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, பழங்காநத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், அதன் நகர ஒருங்கிணைப்பாளர் டேவிட் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆறுமுச்சந்தி பகுதியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில், முன்னாள் மாநிலச் செயலர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.