மதுரை மாநகர வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை தயார் செய்துள்ளதாக, மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளராக எழுத்தாளரும், மாவட்டக் குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதையடுத்து வேட்பாளர் சு.வெங்கடேசன், திமுக மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி, உயர்நிலைக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மதிமுக மாவட்டச் செயலர் பூமிநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் கதிரவன், மாநில துணைப் பொதுச் செயலர் கனியமுதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டின் தொன்மையான நகரங்களில் முக்கியமானது மதுரை. இது, தமிழ் கலாசாரத்தின் குறியீடாகவும், பண்பாட்டுத் தலைநகராகவும் விளங்குகிறது. ஆனால், வளர்ச்சியில் கைவிடப்பட்ட நகராக உள்ளது.
இந்நகரின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு, விரிவான செயல் திட்டத்தை தயாரித்துள்ளோம். ஓரிரு நாள்களில் அது வெளியிடப்படும்.
மதுரைக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து, மக்களிடம் பிரசாரம் செய்வோம். தேர்தல் பிரசாரத்துக்கு 30 நாள்கள் மட்டுமே உள்ளதால், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து ஒரு நொடிக்கு 33 வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என்றார்.