மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே செம்பூர் பகுதியில் விவசாயக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (37). இவர் செம்பூர் பகுதியில் தோட்டத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். சனிக்கிழமை இரவு முதல் அவரைக் காணவில்லையாம்.
இந்நிலையில், அவர் தோட்டத்தின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக கிடப்பது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மனைவி செல்வி மேலூர் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.