மதுரை மாவட்டம் திருவாதவூரிலுள்ள துரோபதி அம்மன் கோயில் பங்குனி உத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை பூக்குழி நிகழ்ச்சி மற்றும் குதிரை, மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெற்றன.
இந்தஆண்டு பூக்குழி வைபவத்துக்கு 152 பக்தர்கள் காப்புக் கட்டி ஒரு மாத காலம் விரதம் மேற்கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் பூக்குழி வைபவம் தொடங்கியது. மாலையில் பூஜைகளை முடித்து ஒவ்வொருவராக பூக்குழியில் இறங்கினர்.
இத்திருவிழாவையொட்டி காலையில் 5 மைல் தொலைவுக்கு குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்றது. திருவாதவூர் -புதுத்தாமரைப்பட்டி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 13 குதிரைவண்டிகள் கலந்துகொண்டன. மாலையில் நடுத்தர மாடுகளுக்கான மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.
இதில் 14 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசு ரூ.25,000-ஐ திருவாதவூர் பதினெட்டான் வண்டிக்கு கிடைத்தது.