மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தொடக்கி வைத்தார்.
நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது, ஆட்சியர் அலுவலகச் சாலை, சிவகங்கை சாலை, குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, மேயர் முத்து பாலம், ஜெய்ஹிந்த்புரம், ரத்னாபுரம், திருப்பரங்குன்றம் சாலை, பை-பாஸ் சாலை, பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக மீண்டும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அடைந்து நிறைவு பெற்றது.
அதைத் தொடர்ந்து, தியாகராஜர் கல்வியியல் கல்லூரி மாணவியர் பங்கேற்ற கோலப் போட்டி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை வீதியில் நடைபெற்றது.
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ரங்கோலி கோலங்களை மாணவியர் வரைந்திருந்தனர்.
இவற்றை பார்வையிட்ட ஆட்சியர், மாணவியருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
இதில், மாநகராட்சி ஆணையர் ச. விசாகன், உதவி ஆட்சியர் பிரவீண்குமார், துணை ஆணையர் ப. குமரேஸ்வரன், உதவி ஆணையர்கள் பழனிசாமி, நர்மதா தேவி, பிரேம்குமார், முருகேசபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.