திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் வெள்ளிக்கிழமை உசிலம்பட்டி கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகர் மயானம் அருகே சுமார் 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் பாண்டி (24), உசிலம்பட்டி கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்த மாணவர் எனத் தெரிந்தது.
முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் பாண்டியைக் கொலைசெய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.