மதுரையில் குழாய் பழுதுநீக்கும் தொழிலாளி இறப்பில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகாரின் பேரில் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் விக்கரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் காசிமாயன்(51). இவரது மகன் சூர்யபிரகாஷ் (21), பிளம்பர். இவர் மதுரை முனியாண்டிபுரம், குறிஞ்சி நகரில் வசிக்கும் ரவிக்குமார் என்பவரது வீட்டில் குழாய் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூர்யபிரகாஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தனியார் மருத்துவமனையில் இருந்த மகனின் உடலை பார்த்துள்ளனர்.
இதையடுத்து தனது மகன் உயிரிழப்பில் மர்மம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை காசிமாயன், திலகர்திடல் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.