மதுரை மத்திய சிறையில் ரகளையில் ஈடுபட்ட 9 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் 1500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 23-ஆம் தேதி 25க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மேல் தளத்தில் ஏறி போலீஸார் மீதும், பொதுமக்கள் செல்லும் அரசரடி பிரதான சாலையிலும் கற்களை வீசினர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த சிறைத்துறை டிஐஜி பழனி, சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகளை சமாதானம் செய்தனர். இதையடுத்து விசாரணை கைதிகள் ரகளையில் ஈடுபடுவதை கைவிட்டனர். இதுகுறித்து கரிமேடு காவல் நிலையத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி 25 விசாரணை கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இதில், சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவின் பேரில் ரகளைக்கு தூண்டுதலாக இருந்த சில கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ரகளையில் ஈடுபட்ட அருண், பெரியண்ணா, கண்ணன், சோணை, ராஜேஷ்கண்ணன், பவித்ரன், வினோத், அம்னி, முத்துக்குமார் ஆகிய 9 பேர் கோவை, திருச்சி, கடலூர், வேலூர் சிறைகளுக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டனர்.