மதுரை அருகே சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் வினோத்(20) மற்றும் பாண்டிசெல்வன்(27). இவர்கள் இருவரும் கட்டடத் தொழில் பார்த்து வந்தனர். நாகமலை புதுக்கோட்டையில் நடைபெறும் கட்டுமான பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வினோத் மற்றும் பாண்டிசெல்வன் இருவரும் திங்கள்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றனர்.
பில்லர் சாலையிலிருந்து மதுரை - தேனி சாலைக்கு கடக்க முயன்ற போது, மதுரையில் இருந்து மூணாறுக்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட இருவரும் பலத்தக் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.