மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு அல்லாத முதுகலை பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையில் 255 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, நாட்டுப்புறவியல், சமூகவியல் உள்பட 24 பிரிவுகளில் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் மே 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளிலேயே வணிகவியல், ஆங்கிலம், பிரெஞ்சு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை முழுவதும் முடிவடைந்தது. நுழைவுத்தேர்வு அல்லாத 13 பிரிவுகளிலும் 178 மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.
மேலும் சமஸ்கிருதம், இன்ஸ்ட்ரூமென்டேசன், தத்துவியல் உள்ளிட்ட 11 சிறப்புப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தபட்சம் 5 மாணவர்கள் இருந்தால் மட்டுமே சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் முதல் நாளில் இந்த பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்ற கலந்தாய்வில் 11 சிறப்புப் பிரிவுகளுக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பித்ததை அடுத்து சேர்க்கை நடைபெற்றது.
இதில் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாள்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 24 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 340 இடங்களுக்கு 255 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆகஸ்டு மாதம் வரை அவகாசம் இருப்பதால் இந்தாண்டு அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.