மேலூர் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மகன், அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலவளவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரர் ராவணன். இவரது மகன் ராஜா (40). இவருக்குத் திருமணமாகி மனைவி கவிதா மற்றும் மகனும், மகளும் உள்ளனர். சமீப காலமாக ராஜா தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக குடும்பத்தினர் சிவகங்கையில் உறவினர் வீட்டில் உள்ள நிலையில், ராஜா மட்டும் மேலவளவில் தனது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும், ராஜாவின் வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அருகில் இருந்த உறவினர்கள் வீட்டினுள் சென்று பார்த்தத போது, ராஜா கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மேலவளவு போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் கொலை நடத்த இடத்தில் இருந்த கைவிரல் பதிவுகளையும், தடயங்களையும் சேகரித்தனர்.
கொலையாளிகள் யார் என்பது குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் மேலவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி செய்து வருகின்றனர்.