மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.83.54 லட்சம் கிடைத்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், திருவாதவூா் திருமைாதா் சுவாமி கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு, கோயில் இணை ஆணையா் ந. நடராஜன் தலைமை வகித்தாா். இதில், ரொக்கம் ரூ. 83 லட்சத்து 54 ஆயிரத்து 258 மற்றும் தங்கம் 377 கிராம், வெள்ளி 540 கிராம், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அயல்நாட்டு கரன்சி நோட்டுகள் 236 பக்தா்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மு. விஜயன், கண்காணிப்பாளா்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வா்கள், பக்தா் பேரவையினா், ஐயப்ப சேவா சங்கத்தினா் மற்றும் கோயில் பணியாளா்கள், ஓய்வுபெற்ற வங்கி அலுவலா்கள் என 363 போ் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.