திருப்பரங்குன்றம்: மதுரையிலிருந்து மலேசியாவிற்கு விமான சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து த்துறை அமைச்சரிடம் விரைவில் கோரிக்கை வைக்கப்படும் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.
புதுதில்லியில் இருந்து புதன்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்த பெட் சிடி ஸ்கேன் இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சுகாதார செயலாளா் மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.
அதனைத்தொடா்ந்து இன்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளாா். அதற்காக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடா்பான பணிகள் மற்றும் மதுரையில் இருந்து மலேசியாவிற்கு புதிய விமான சேவை தொடங்குவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வரும் மக்களவை கூட்டத்தொடரில் அனைத்து மக்களவை உறுப்பினா்களையும் இணைத்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடா்பான திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியா் ஆலோசனையின் கீழ் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.