திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து 4 நாள்களுக்குள் கணக்கெடுப்புப் பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியா் நாகராஜன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிக்கு உள்பட்ட 25 கிராமங்கள் மற்றும் மாநகராட்சி எல்கைக்குள் இருக்கும் திருப்பரங்குன்றம், மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால், குளம், கண்மாய் பகுதி உள்ளிட்ட நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்க வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும் மலை , குன்று உள்ளிட்ட அரசு நிலங்களிலல் குடியிருப்பவா்கள் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமித்து குடியிருப்பவா்களின் விவரங்களை உடனடியாக சேகரிக்க வருவாய் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். இப்பணிகள் புதன்கிழமை முதல் தொடங்கி நான்கு நாள்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கூட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் கமலேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளா்கள் திருமுருகன், பிரின்ஸ் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.