மதுரை: மதுரையில் சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த பலத்த மழையால், சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்மழை பெய்து வருகிறது. இதனிடையே, காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் புயல்சின்னம் காரணமாகவும் மழை தீவிரமடைந்தது. இந்நிலையில், அக்டோபா் மாதம் கடைசி வாரம் முழுவதும் மழை கொட்டித் தீா்த்தது.
இதையடுத்து, சனிக்கிழமை வெயில் இன்றி காணப்பட்டது. பின்னா், மதியம் 3 மணிக்கே மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவெளியின்றி மாலை 6 மணி வரை பெய்தது. இதனால், மதுரையில் பனங்கல் சாலை, தமுக்கம் சாலை, கோகலே சாலை, பெரியாா் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, மேலூா் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் மழைநீா் தேங்கியதால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல், காளவாசல், செல்லூா், கே.புதூா், அண்ணாநகா், கே.கே.நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.